Friday, August 26, 2016

உலகங்கள் உறைந்தன!



ஆணாய் பிறந்தவனெல்லாம்
காத்திருக்க தான் வேணும்!
வந்து சேர்ந்தாள்...
முடிவில் முடித்து வைத்தாள்,
ஆயிரம் அலைகளின்
அரை மணி அரும்பாட்டை.
அருகமர்ந்த அந்த 'சிறை' நொடியில்
தொப்பலாய் நனைத்தாள் எனை!

'அடடா சீக்கிரம் வந்து
காரியம் கெடுத்தேனோ?!
கயல் விழிகளும்,
கரிசல் கூந்தல்களும்
எத்தனை கடந்தது?!
எத்தனை கவர்ந்தது?!'
விரல் பினைத்து பிடித்திருக்க,
மடிந்து-மேலிருந்த கால் முட்டிகளிரண்டின் இடையே,
பால் முகம் பதித்தவள் விளையாட்டாய் கேட்கவும்...
விரையம் செய்த பொழுதுகளில்
வினோத உலகம் செய்ய முனைந்ததை விவரித்தேன்...
குழந்தை போல!

தனக்கொன்று கேட்டபோது...
சின்ன குரல் இன்னும் சினுங்கியது.
பொய் வலி போக்க தலைமேல்
பொன் விரல்கள் விரைய,
செந்நாக்கு முன் எழுப்பி
இன்னும் புதைத்துக் கொண்டாள் சிரத்தை,
'நமக்கு தானடி மடச்சி' என, செல்லக் கொட்டொன்று
கிடத்தி சொல்லியதும்!

தாயாக தயாரானோம்
புதியதோர் உலகிற்கு.
எழுந்து நின்றவள்
இழுத்து சொருகி கொஞ்சம்
சீலையும், நிறைய என்னையும்
சிறை இட்டாள்!!
சிகை கொண்டை முடிந்தபடி...
'செங்கல்,
தூரிகை,
கலவை
எது வேனும், விரைகிறேன்...
மழைக்கு முன் உலகம் உருவாக்கனும்.'
புறப்பட எத்தனித்தவளை
கரம்பட பற்றியிழுத்து இருத்தி
சமன் செய்தேன்
எனை சிறையிட்ட கணக்கை.
'நம் சிந்தனை மட்டும் போதுமடி,
உணர்ச்சி சரவெடி!!' என்றபடி
கொஞ்சம் நெருங்கப் பார்த்தேன்...
நொறுங்க குடுத்தாள் பதில்-
"முதல்ல உலகம் செஞ்சு தா!!"

இரும்பு இயந்திரம் எடுத்தொழித்து
பேரிச்ச மரம் நட்டாச்சு,
இரவு மட்டும் போதுமே...என்றேன்,
'இல்லை... இல்லை உன் தொல்லை தாளாது
இரண்டு சூரியன் வேண்டும்' என புலம்பிப் பதித்தாள்.
மயில் மேனி வியர்த்தால் மலையிலிருந்து
தள்ளி கொன்று விடுவதாய் மிரட்டி,
பின் அனுமதித்தேன் சூரியர்களை!
'சூடு தாங்க மாட்டா, பாவம்!'

முயல்,வயல்
புல்,மயில்
நீர் வீழ்ச்சி, வானவில்,
மான், மீன்
பல வண்ணக் குயில் என
'நிச்சயம் வேனும் பட்டியல்' ஒரு வழியாய் முடிந்தது.
பாம்புக்கெல்லாம் பல்லிளிப்பவள்
பரபரக்கும் கரப்பான் கண்டு
என் மேல் தாவிய நாள் நினைவில்
ரகசிய சலுகை....
'இருந்துக்கோ, அவ கண்ணுல படாம'.

பூக்களுக்கு இரெக்கை தந்து உலவவிட்டதும்
சதா சிலு சிலு சாரல் பொழிய ஏற்பாடு செய்ததும்,
முத்தும் இரத்தினமும் தரை முழுதும் பதித்து விட்டு
நட்சத்திரம் பதில் அவள் தோடுகள் வைக்க முடிவெடுத்ததும்
வானம் செய்வதில் மும்முரமானோம்.
'வானுக்காக குழைத்து வைத்த நீலம்
கடலில் ஏகம் இருக்க,
திட்டு திட்டாய் வெள்ளையடித்து விட்டு
வெண்மேகம் என்கிறாய்.
வீனாக்காதடி, நிலவுக்கு
பின் எதை பூச?!'

சினுங்கல் இரைந்து விட்டு,
பொய் கோபத்தில் உடல்  சிலுப்பி,
"'அல்லி'னா அவ்ளோ இஷ்டம்.
அத நிலவா செஞ்சு தந்தா என்னவாம்?!"

ஆணாய் பிறந்தவனெல்லாம்
தலையாட்டவும் வேணும்!
"காது சிவக்க,
புருவங்கள் நெளித்து,
முத்துப் பற்கள் நடுவே
வார்த்தெடுத்த வார்த்தைகளுக்கு
மறுப்பு சொல்லல் ஆகுமோ?!
சரிடீ...சினுங்காத" என்று
அல்லிப் பொருத்த இடம் தேடிய படி
கழுத்து உயரித்தியதும்
அது நிகழ்ந்தது....
கழுத்தை தீண்டிய வெப்பம்,
அவள் தீஞ்சுவாசம் எனப் புரிவதற்குள்
சிலீரென கழுத்தோடு கட்டுண்டு
கனி இதழ் வைத்தோர் முத்தமிட்டாள்...
எங்கள் உலகங்கள்
நாங்கும் உறைந்தன!!!

-ஆறு

No comments:

Post a Comment